எப்.ஐ.ஆர். போட்ட 24 மணி நேரத்தில் நெட்டிலும் வெளியிட வேண்டும்: சுப்ரீம்கோர்ட் அதிரடி
டெல்லி: காவல்நிலையங்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அது குறித்த தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட எந்த ஒருநபருக்கும் அவர் மீதான குற்ற விவரங்கள் உடனே தெரியப்படுத்த வேண்டும்; அப்போதுதான் உரிய சட்ட ஆலோசனையை அவரால் பெற முடியும். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க கோரி இந்த பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு:
24 மணிநேரத்தில்
காவல்நிலையங்களில் எந்த ஒரு சம்பவம் குறித்தும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் அதில் இருந்து 24 மணி நேரத்தில் வழக்கு விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மிக முக்கிய வழக்கு விவரங்களை பதிவு செய்ய 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும்.
விலக்குகள்
வழக்கோடு தொடர்புடைய காவல்நிலைய இணையதளத்தில் எஃப்ஐஆர் பதிவுகள் உடனுக்குடன் பதிவிட வேண்டும். பயங்கரவாதம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பலாத்கார வழக்குகளுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அனைத்து மாநிலங்களும்
இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முதலில் 48 மணிநேரம்
முன்னதாக காவல்நிலையங்கள் 48 மணிநேரத்தில் எப்ஐஆரை இணையத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டது. பின்னர் இது 24 மணிநேரமாக மாற்றப்பட்டது.