அது ராஜதந்திரம்... தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை பைசல் செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தமிழக மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. ராஜதந்திரம், அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்துக்கொள்ள அவர்கள் அறிவுரை வழங்கினர்.
தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் ஏ.கே.எஸ்.விஜயனும், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் இன்று ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது ராஜதந்திரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவர் அளித்த விளக்கத்தை ஏற்று, ராஜதந்திரம் மற்றும் அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.