தேவையில்லாத கேஸ் போட்டால் ரூ. 10 லட்சம் அபராதம்.. தினகரனுக்கு சுப்ரீம் கோர்ட் வார்னிங்!
அந்நிய செலாவணி மோசடி வழக்கை 3 மாதத்தில் விசாரிக்க ஹைகோர்ட் விதித்த உத்தரவை எதிர்த்து டிடிவி. தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் தினகரனை கடிந்துள்ளனர்.
டெல்லி : அந்நிய செலாவணி மோசடி வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து டிடிவி. தினகரன் தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், அந்நிய செலாவணி மோசடி செய்த வழக்கு விசாரணை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுகள் ஒரு தலைபட்சமாக இருப்பதாக டிடிவி. தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுகளை முதலில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் 3 மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் 3 மாதத்தில் விசாரணையை முடிக்கக் கூடாது என்று தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றங்கள் வழக்கை விரைந்து முடிக்கவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்க வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்கக் கூடாது என்று தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் மனுவை வாபஸ் பெறாவிட்டால் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதனையடுத்து தினகரன் தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் டிடிவி. தினகரன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.