7 தமிழர் விடுதலை- தமிழக மனு மீது மார்ச் 26-க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்ற மனு மீது மத்திய அரசு மார்ச் 26-ந் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக்கியது. அத்துடன் ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை தொடர்பாக மாநில அரசு உரிய நடைமுறைகளின்படி முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.
இதனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சட்டப்படி ஆயுள் தண்டனைக் கைதிகளாகினர். இவர்களைப் போல இதே வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக நளினி, பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயககுமார் ஆகியோரும் சிறையில் இருக்கின்றனர். குற்றவியல் நடைமுறை சட்டப்படி ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசு விடுதலை செய்ய முடியும் என்பதால் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.
அத்துடன் சட்ட நடைமுறைகளின்படி மத்திய அரசுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்துக்குப் போய் முறையிட்டது. இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு கடந்த வாரம் தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி மகன் ராம சுகந்தன் மற்றும் ராஜிவுடன் குண்டுவெடிப்பில் பலியானோர் சார்பாக 7 தமிழர் விடுதலைக்கு எதிராக தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு மார்ச் 26-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அன்றைய தினம் மறுவிசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது ராமசுகந்தன் மற்றும் குண்டிவெடிப்பில் பலியானோர் உறவினர்கள் தங்களது மனுவையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் இதை நிராகரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்தபின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.