நெடுஞ்சாலையோர மதுபான கடைகளை காக்க தில்லுமுல்லு செய்யும் மாநில அரசுகள்.. சுப்ரீம் கோர்ட் விசாரணை
சுப்ரீம்கோர்ட் உத்தரவிலிருந்து தப்பிக்க ஏதுவாக ராஜஸ்தான், உ.பி, ம.பி, பஞ்சாப், கோவா போன்ற பல மாநிலங்கள் மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி வருகின்றன.
டெல்லி: மதுபானக் கடைகளுக்காக நெடுஞ்சாலை பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருவதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் அருகே மதுபானக் கடைகள் இருக்க கூடாது என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. நாடு முழுமைக்குமான இந்த உத்தரவால், தமிழகத்தில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
சுப்ரீம்கோர்ட் உத்தரவிலிருந்து தப்பிக்க ஏதுவாக ராஜஸ்தான், உ.பி, ம.பி, பஞ்சாப், கோவா போன்ற பல மாநிலங்கள் மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி வருகின்றன.
இதை எதிர்த்து, அரைவ் சேஃப் சொசைட்டி என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் பஞ்சாப் அரசு ஈடுபட்டு வருவதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சண்டீகரை இணைக்கும் முக்கியமான 6 சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாக இருந்ததாகவும், இப்போது, அவை மேஜர் ரோடுகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு இடைக் கால தடை விதிக்க மனுதாரர் கேட்டுக்கொண்டார்.
இந்தத மனு மீதான விசாரணையை, கோடை விடுமுறை முடிந்த பிறகு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது.