அன்னியசெலாவணி வழக்குகளில் தினகரன் தப்பவே முடியாது- சுப்ரீம்கோர்ட்டில் 2 மனுக்களும் தள்ளுபடி!
அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் தினகரனின் 2 மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துவிட்டது.
டெல்லி: அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் தினகரனின் 2 மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அன்னிய செலாவணி வழக்குகளில் தினகரன் தப்பவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் மீது 20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஹைகோர்ட் உத்தரவு
ஆனால் அமலாக்கப் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து தினகரன் மீதான இரு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இழுத்தடிப்பு
இதனால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையும் இழுத்தடிப்பதற்காக தம் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தள்ளுபடி
அவரது மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்குகளுக்குத் தடை விதிக்க அதிரடியாக மறுத்துவிட்டது. இதனால் எழும்பூர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் தினகரன்.
ரூ28 கோடி அபராதம் உறுதி
இதேபோல் மற்றொரு அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ரூ28 கோடி அபராதத்தை தினகரன் கட்டுவதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இந்த அபராதத்தை ரத்து செய்ய கோரியும் தினகரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் இருந்து தினகரனால் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.