2ஜி: அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் வேணுகோபாலை நீக்கிய மத்திய அரசு முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் அமலாக்கப் பிரிவு வழக்கறிஞராக பணியாற்றிய கே.கே. வேணுகோபாலை மத்திய அரசு நீக்கியதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது என்பது புகார். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் மீது அமலாக்கப் பிரிவும் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் தொடர்பாக கனிமொழி உள்ளிட்ட பலர் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகளில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவின் வழக்கறிஞராக கே.கே. வேணுகோபால் ஆஜராகி வந்தார். ஆனால் திடீரென கடந்த மாதம் அவரை அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்தது.
ஸ்பெட்க்ரம் வழக்கின் விசாரணையில் அமலாக்கத் துறை அனுமதியின்றி சில விஷயங்களை வேணுகோபால் செய்ததாக கூறி நீக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த விவரம் உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் நீதிமன்றத்துக்கு உதவும் வழக்கறிஞராகவும் வேணுகோபாலை நியமித்துள்ளது.