ஏர்செல் மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ கோர்ட் விசாரிக்கும்- கலாநிதி, தயாநிதி அப்பீல் டிஸ்மிஸ்!!
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை மட்டும்தான் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்; ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதி ஓபி ஷைனி தள்ளுபடி செய்தார்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இன்றைய விசாரணையின் முடிவில் மாறன் சகோதரர்களின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஸ்பெக்டரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கையும் விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.