கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு, தேமுதிக மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி: கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.
தேமுதிக மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இருப்பினும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிரான சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று தாக்கூர் பெஞ்ச் அறிவித்து, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, கெயில் நிறுவனம், தமிழகம் வழியாக எரிவாயு குழாய்களை அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது.