17 வருட போராட்டம்.. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..சுப்ரீம்கோர்ட் அதிரடி
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
டெல்லி: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இஸ்ரோவில் 90களின் தொடக்கத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்தான் தற்போது உள்ள திரவ எரிபொருள் தொழில்நுட்பத்திற்கு அடித்தளம் இட்டவர். இவர்தான் பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பத்திற்கு முன்னோடி.
இந்த நிலையில் இவர் இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்றதாக 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது. மாலத்தீவு தீவிரவாதிகள் மூலமாக இவர் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
சிபிஐ விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் இவர் அதன்பின் மனஉளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார். பணி உயர்வும் இவருக்கு அளிக்கப்படவில்லை. அதன்பின் 2001ல் இவர் ஓய்வும் பெற்றார்.
இந்த நிலையில் ஓய்வு பெற்றதோடு இவர் தன்னை கைது செய்த, வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 17 வருடமாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் இன்று இதில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை உயரதிகாரிகள் சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோரும், மற்ற விசாரணை அதிகாரிகளும் இந்த பணத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 17 வருட சட்ட போராட்டம் நலன் முடிவை எட்டியுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் தவறாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.