நீரா ராடியா டேப் - சிறப்புக் குழுவுக்கு 3 மாத அவகாசம்: உச்சநீதிமன்றம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி பதிவுகளை முழுமையாக ஆராய நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்புக் குழுவுக்கு 3 மாதம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷணின் மக்கள் வழக்காடு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, வி. கோபால் கௌடா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் இந்த மனு மீது கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 4-ந் தேதியும் விசாரிக்கப்பட்டது. அப்போது நீரா ராடியாவின் டேப் பதிவுகளில் ஏராளமானவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு மட்டுமன்றி தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பானவை எனத் தெரிய வந்துள்ளது.
5800 உரையாடல்கள்
நீரா ராடியாவின் பேச்சு அடங்கிய 5,800 உரையாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில மட்டும்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு தொடர்புடையவை.
சிறப்புக் குழு
இதனால் எஞ்சிய பதிவுகளில் எவை, எவை எந்தெந்த விவகாரம் தொடர்புடையவை என்பதை நீதிமன்றம் ஏற்கெனவே நியமித்த சிறப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும்.
3 மாத அவகாசம்
இக் குழு வரும் 17-ந் தேதி தொடங்கி 3 மாதங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
யார் யார்?
சிறப்புக் குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் தொடர்பான உத்தரவு வரும் 17ந் தேதி பிறப்பிக்கப்படும். இக் குழு பணியை முடிக்கும்வரை அதில் இடம்பெறும் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட துறைகள் இடமாற்றம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
வருமான வரித்துறை ஆய்வாளர்கள்
முன்னதாக இம் மனு மீதான விசாரணையின்போது நீரா ராடியாவின் உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய வருமான வரித் துறையில் பணியாற்றும் ஐந்து ஆய்வாளர்களின் பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் வழங்கினார். ஆனால் மேலும் சில ஆய்வாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இன்று தாக்கல் செய்யும்படி மத்திய அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.