கலவரத்தை ஒடுக்க பெல்லட் குண்டு கூடாது.. மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கலவரங்களின் போது பயன்படுத்தப்படும் பெல்லட் ரக குண்டுகளுக்கு மாற்று வழியை வரும் 2 வாரங்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள
டெல்லி : வன்மூறை சம்பவங்களின்போது அவர்களை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புப் படையினர் பெல்லட் என்ற கூரிய முனை கொண்ட குண்டுகளை பயன்படுத்துவதற்கு பதில் மாற்று வழி 2 வாரங்களுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த ஜூன் மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் வானியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மாதங்கள் நீடித்த இந்த போராட்டங்களின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினர் மீது வானியின் ஆதரவாளர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
மோதல்
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றது. சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பலமுறை பெல்லட் ரக துப்பாக்கி
இந்த கலவரத்தின்போது பாதுகாப்பு படையினர் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பெல்லட் குண்டுகளை பயன்படுத்தினர். இதனால் பலர் கண்பார்வை இழந்துள்ளனர். கூர்மையான இந்த குண்டு பாய்வதால் பலர் உயிரிழந்துவிட்டனர்.
ஹைகோர்ட்டில் வழக்கு
பெல்லட் ரக குண்டுகளுக்கு மாற்றாக கலவரத்தை கட்டுப்படுத்த வேறு வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதால் பெல்லட் ரக குண்டுகளை பயன்படுத்துவதை தடை கோரும் மனுவை ஜம்மு- காஷ்மீர் ஹைகோர்ட் செப்டம்பர் 22-ஆம் தேதி நிராகரித்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் ஹைகோர்ட் பார் அசோசியேஷன் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கானது தலைமை நீதிபதி கே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பெல்லட் ரக குண்டுகளால் பலர் காயமடைவதற்கு வேதனை தெரிவித்தார். மேலும் பெல்லட் ரக குண்டுகளுக்கு மாற்றாக திறம்பட செயல்படும் வேறு ஒன்றை ஆய்வு செய்ய வேண்டும். அதுகுறித்து மத்திய அரசு 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.