ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது கால்வாய் திட்டம்- 6 வாரத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உத்தரவு
டெல்லி: ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுவது தொடர்பாக 6 வார காலத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இவ்வழக்கில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது என குற்றம்சாட்டினார். ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் மத்திய அரசு தமது நிலைப்பாட்டை 6 வாரத்தில் தெரிவிக்க உத்தரவிட்டனர்.