பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம் ஆக்கப்படுமா? 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
குழந்தைகளுக்கு நடுநிலைப் பள்ளி வரை யோகா பயிற்சி கட்டாயமாக்கப்படுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது.
டெல்லி: பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்கப்படுவது குறித்த வழக்கை வருகிற 7- ம் தேதி விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
யோகா மதச்சார்பற்றது என்று கலிபோர்னியா அப்பீல் நீதிமன்றம் அறிவித்து ஒராண்டுக்குப் பிறகு அந்தப் பயிற்சியில் மதச் சம்பிரதாயங்கள் அடங்கி உள்ளதா அல்லது அனைவரது உடல் நலத்திற்கு உகந்ததுதானா என்பது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அடங்கிய பெஞ்ச் முன்பு வருகிற 7- ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது, பள்ளிகளில் 1-லிருந்து 8-வது வகுப்பு வரை யோகா பயிற்சியை கட்டாயமாக்கப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி இதுசம்பந்தப்பட்ட மனுவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபத்யாவ் தாக்கல் செய்திருந்தார். அதில் உடல் நலத்தை பாதுகாக்கும் யோகாவுக்கு தேசிய கொள்கை உருவாக்கவும், அரசியல் அமைப்பின் சரத்து 21-ன் கீழ் மக்களின் உடல் நலம் கருதி மத்திய அரசுக்கு இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
மேலும், வாழ்வுரிமை கல்வி மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு என்சிஆர்டி மனித வளமேம்பாட்டுத்துறை என்சிடியி மற்றும் சிபிஎஸ்சி நிலையங்கள் யோகா உடல் நலக் கல்விக்கு தரமான புத்தகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகளுக்கு உடல் நலக் கல்வி அளிக்க மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.