கெயில் வழக்கு: தமிழக அரசின் சீராய்வு மனு மீது மார்ச் 1-ல் விசாரணை
டெல்லி: விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய்களை பதிக்க உச்சநீதிமன்றன் அனுமதித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீது மார்ச் 1-ந் தேதியன்று விசாரணை நடைபெற உள்ளது.
கெயில் எரிவாயு குழாய்களை தமிழகத்தின் 7 மேற்கு மாவட்டங்களில் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் இத்திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் மத்திய அரசின் கெயில் எரிவாயு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் அமைக்க அனுமதி அளித்து கடந்த 2-ந் தேதி தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதேபோல் தேமுதிக, விவசாயிகள் சங்கமும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தன.
இந்த சீராய்வு மனு மீது மார்ச் 1-ந் தேதியன்று விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தேமுதிக மற்றும் விவசாயிகள் சங்கங்களின் மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது.