கோவாவில் பாஜக ஆட்சி அமைவதில் சிக்கல்.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது காங்கிரஸ் !
கோவாவில் பா.ஜ.க ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி: கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோவாவில் ஆட்சியை அமைக்க பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக போராடின. பின்னர் உதிரிக் கட்சிகளான கோவா முன்னணிக் கட்சி, எம்ஜிபி ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் பாஜக வழங்கியது.
இதைத் தொடர்ந்து பாஜகவை ஆட்சி அமைக்க கோரினார் ஆளுநர். இதனையடுத்து கோவா முதல்வராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாளை பொறுப்பேற்க இருக்கிறார். இதற்காக அவர் வகித்து வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கோவா மாநில காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சந்திகந்த் கவில்கர் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அதிக எம்.எல். ஏ.,க்கள் கொண்டவர்களை தான் முதல்வர் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. சந்திரகந்த கவில்கரின் மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.