நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: தமது வயது சான்றிதழ் விவகாரத்தில் தீர்ப்பை விமர்சித்த முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமது பதவிக் காலம் தொடர்பான சர்ச்சையில் வயதுச் சான்றிதழை உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பலாத்கார வழக்கில் குற்றவாளியின் வயது சான்றிதழ் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது என்பது வி.கே. சிங் தெரிவித்திருந்த கருத்து.
இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸில் செப்டம்பர் 22-ந் தேதி செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து வி.கே.சிங் மீது நேற்று அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையின் போது வி.கே.சிங்குக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. மேலும் வி.கே.சிங்கின் கருத்தை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.