மொபைல் எண்ணுடன் ஆதாரை இணப்பது கட்டாயம்தானா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்தானா, என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி : மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஏன் கட்டாயம் என்று 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசின் சம்பந்தப்பட்டத்துறைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று குறுந்தகவல்களை அனுப்பி வருகிறது. இதனால் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் பலரும் தங்களது ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கும் அடங்கும். அப்போது ஆதாரை தொலைபேசி எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்தும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அளித்துள்ளது.
எதற்காக ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று 4 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆதாரை பல்வேறு திட்டங்களுக்கு இணைப்பது கட்டாயம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் காலக்கெடுவை மார்ச் 2018 வரை நீட்டிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டையடுத்து ஆதாரை இணைக்காதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காது என்று என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியது. இது குறித்து பதில் தாக்கல் செய்ய நீதிமன்றம் காலஅவகாசமும் அளித்திருந்தது.
ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பதை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. அப்போது நாடாளுமன்ற சட்டங்களுக்கு எதிராக ஒரு மாநில அரசு வழக்கு தொடுக்க முடியாது என்று குறிப்பிட்டது. ஆனால் மம்தா மேற்குவங்க முதல்வர் என்ற அடிப்படையில் இன்றி தனி நபர் என்ற அடிப்படையில் வழக்கை தாக்கல் செய்யலாம் என்று நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.