ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. மாறன் சகோதரர்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் 4 வாரத்திற்குள் பதிலளிக்க கலாநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத் தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரின் ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க நெருக்கடி கொடுத்ததாக தயாநிதி மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் முடிவாக, கடந்த பிப்ரவரி மாதம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, மாறன் சகோதரர்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.