புனித வெள்ளி தினத்தில் நீதிபதிகள் கூட்டம்.. கோபத்தில் பிரதமர் விருந்தை புறக்கணித்த நீதிபதி!
டெல்லி: புனித வெள்ளி தினமான நேற்று நீதிபதிகள் கூட்டத்தை நடத்தியதால் கோபம் அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க உள்ள இரவு விருந்தை புறக்கணித்துவிட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 24 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கு பெறும் இரண்டு நாள் கருத்தரங்கம் புனித வெள்ளியான நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட நீதிபதிகளுக்கு, இன்று இரவு, பிரதமர் விருந்து அளிக்கிறார்.
ஆனால் கேரளாவை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் புனித வெள்ளி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியாது என பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அரசால் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்ட பண்டிகை மற்றும் சுப தினங்களில் முக்கியமான கூட்டங்களை நடத்தப்படுவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அனைத்து மத தினங்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமருக்கு ஜோசப் வலியுறுத்தியுள்ளார். புனித வார இறுதியான, இந்த மூன்று நாட்களும், தான், தனது குடும்பத்தாருடன் கேரளாவில் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
புனித வெள்ளி அன்று நீதிபதிகள் கூட்டம் நடத்த அழைப்புவிடுத்திருந்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவுக்கும், இதே குரியன் ஜோசப் கடிதம் எழுதி எதிர்ப்பை தெரிவித்திருந்தார். தலைமை நீதிபதியும், பதிலுக்கு கடிதம் எழுதி, நீதித்துறை அமைப்புதான் தனி நபர்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.