பத்மநாபசுவாமி கோயில் சொத்துகளை கணக்கிட கணக்கு தணிக்கை துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சொத்துகளை கணக்கு தணிக்கை துறை கணக்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சொத்து விவரங்கள் மற்றும் கோயில் நிர்வாகம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
அவர் கோயிலில் 35 நாட்கள் நேரடியாக ஆய்வு நடத்தி, கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கோயில் ரகசிய அறைகளில் இருந்து மன்னர் குடும்பத்தினர் நகைகளை கடத்தி செல்வதாகவும், கோயில் வருமானம் தொடர்பாக முறையாக எந்தவித ஆவணங்களும் பராமரிக்கப்படுவதில்லை என்றும், சில கோயில் ஊழியர்களுடன் இணைந்து கோயில் சொத்துக்களை மன்னர் குடும்பத்தினர் முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்பது உட்பட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் செயல் அதிகாரியின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ளது. இவர்கள் இருவரையும் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பன உட்பட 129 பரிந்துரைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மன்னர் குடும்பத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோபால் சுப்பிரமணியத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கருத்துகள் கற்பனையானவை. அதில் எந்த உண்மையும் கிடையாது. எனவே, அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மனுவுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் கோபால் சுப்பிரமணியம் ஆய்வு நடத்தினார். அவருடைய கருத்துகளில் உங்களுக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அவரை குற்றம்சாட்ட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பத்மநாபசுவாமி கோயில் குறித்து கோபால் சுப்பிரமணியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் கடும் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மிக அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிககள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது பத்மநாபசுவாமி கோயில் சொத்து விவரங்களை கணக்குத் தணிக்கைத் துறை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.