பயிர்க் காப்பீட்டு திட்டப்படி இழப்பீடு அளிக்கிறீர்களா?.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டப்படி இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பது குறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக குஜராத்தை சேர்ந்த கிராந்தி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு மீதான விசாரணை 3 அமர்வு நீதிபதி முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், விவசாயிகள் விளைபொருளுக்கு உரிய ஆதரவு விலை நிர்ணயிப்பது, வங்கிகள் மூலம் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிர்க் கடன், பயிர் சேதம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் படி உரிய இழப்பீடு வழங்குவது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, விளை பொருளுக்கு உரிய விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், டெல்லியில் 41 நாள்களாக போராட்டம் நடத்தியதும் அவர்களுக்கு அண்டை மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.