கிரிமினல் வேட்பாளர்கள்.. பின்னணி என்ன.. சாட்டையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்.. . 48 மணி நேர கெடு!
டெல்லி: கிரிமினல் பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக நிறுத்த கூடாது என்று.. சொல்லி சொல்லி பார்த்து அலுத்துப் போய் விட்டது சுப்ரீம் கோர்ட்.. இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு கிடுக்கிப்பிடி உத்தரவை அது பிறப்பித்துள்ளது.
அத்தகைய வேட்பாளர்களின் பின்னணி காரணங்களை கேட்டு, அவைகளை வெப்சைட்டுகளில் வெளியிட வேண்டும் என கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்து.. 48 மணி நேரம் கெடுவும் விதித்துள்ளது சுப்ரீம் கோர்ட்!
அதாவது ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் அவர் குறித்த அனைத்து குற்றப் பின்னணி விவரத்தையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள்
பொதுவாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் எந்த வித குற்ற பின்னணியும் இல்லாமல் இருக்க வேண்டும்... ஆனால் இன்னைக்கு வரைக்கும் குற்ற பின்னணியில் இருக்கிற நிறைய பேர் தேர்தலில் போட்டியிட்டு தான் வருகிறார்கள். எம்எல்ஏக்கள், எம்பிக்களாக, ஏன் அமைச்சர்களாக கூட இருக்கின்றனர்.
தேர்தல் ஆணையம்
இதை பற்றி சுப்ரீம் கோர்ட் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது.. அதற்கு, 2018 ம் ஆண்டு போடப்பட்ட குற்றப்பின்னணி இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற சட்டம் பயனளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் பதில் சொல்லியது. இதையடுத்து, வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அந்த விவரங்களை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என 2018-ல் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
அஸ்வினி உபாத்யாயா
இந்த உத்தரவு பலன் அளிக்காததால் வேறு தீர்வு வேண்டும் என கோரி, பாஜகவின் மூத்த தலைவரும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்தனர்.. குற்ற பின்னணி இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதை விட அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சிகள் இதனை செய்யாமல் இருத்தலே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் துர்நாற்றம்
கிரிமினல் குற்றவாளிகளால் அரசியலில் துர்நாற்றம் வீசுகிறது. அது சரி செய்யப்பட வேண்டும் என்றுகூட காரசார வாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை எழுந்தன.. இந்நிலையில், இன்று இது சம்பந்தமாகத்தான் ஒரு பரபரப்பு உத்தரவை சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.. போட்டியிட வாய்ப்பு தந்ததற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று சொல்லி அதற்கு கெடுவும் விதித்து உள்ளது.
கிரிமினல்கள்
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 4 பொதுத்தேர்தலில் அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்திருப்பது அபாயகரமானது... குற்ற பின்னணி உடைய வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், அவர்களின் விவரத்தை, அவர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணிநேரத்தில் கட்சி வெப்சைட் மற்றும் சமூக வலைதளம், பிராந்திய நாளேடுகளில் வெளியிட வேண்டும்.
விரிவான விளக்கம்
இந்த விவரங்களை, அடுத்த 72 மணி நேரத்திற்குள் அரசியல் கட்சிகளும், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தாக வேண்டும். குற்ற பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக தேர்வு செய்தது குறித்தும், வெற்றி வாய்ப்பை தாண்டி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது குறித்தும் அரசியல் கட்சிகள் விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
பரபரப்பு உத்தரவு
வேட்பாளர்களைத் தேர்வு செய்வது என்பது அவர்களது தகுதிகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர வெற்றி பெறுவாரா மாட்டாரா என்ற அடிப்படையில் இருக்கக் கூடாது. அதை ஒரு காரணமாக கட்சிகள் கூறக் கூடாது. அப்படி ஒருவேளை அரசியல் கட்சிகள் விவரங்களை அளிக்க தவறினால் தேர்தல் ஆணையம், கோர்ட்டில் முறைப்படி அதனை தெரிவிக்க வேண்டும்... கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம்..." என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.