மணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரம்... சிபிஐ விசாரணை குழுவை விளாசிய சுப்ரீம் கோர்ட்
மணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை குழுவை விமர்சித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: மணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரத்தில் பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்யாத சிபிஐ-ன் சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் கடுமையாக விளாசியது.
மணிப்பூரில் தனிநாடு கோரும் ஆயுத குழுவினர் என்ற சந்தேகத்தில் 1,500-க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
மேலும் போலி என்கவுண்ட்டர் புகார்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவும் சிபிஐ-ன் விசாரணை குழுவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணைகளை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நிறைவு செய்யவும் அப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர், யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை குழுவின் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இதுவரை 12 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை போக்கை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், பிப்ரவரி 28-ந் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளின் விசாரணையை முடிக்க கெடு விதித்தது.
மேலும் 30 முதல் தகவல் அறிக்கையை ஜனவரி 31-ந் தேதிக்குள் பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையை சிபிஐ கண்காணிக்கவும் உத்தரவிட்டு மார்ச் 12-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.