இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் "ஜாட்" சமூகத்தை சேர்த்தது செல்லாது: சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் சமூகத்தை சேர்த்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக் காலத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ஜாட் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டது. இதன் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஜாட் சமூகத்தினரும் அனுபவிக்கலாம் என்ற நிலை உருவானது.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் ஜாட் சமூகத்தினரின் வாக்குகளை கவருவதற்காக அப்போதைய மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை எதிர்த்து ரக் ஷா சமிதி உட்பட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தன. இவ்வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலில் ஜாட் இனத்தை சேர்த்த மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளப்படுத்த ஜாதி என்பது முதன்மையாக அம்சமாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோர் என்பதை ஜாதி மட்டுமே தீர்மானித்தும்விட முடியாது; ஜாட் சமூகத்தினர் போன்ற அரசியல் அமைப்பாக திரண்டுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது;
இதரபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறும் ஜாதிகள் எண்ணிக்கையை ஏன் அதிகரிக்க வேண்டும்? குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து மத்திய அரசு புதிய வரையறைகள் மேற்கொள்ள வேண்டும்; திருநங்கைகளை இந்த இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.