உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்திப்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை உணவு இடைவேளையின்போது அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்தித்தனர்.
டெல்லி: ஜனநாயகம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்தித்து பேசினர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக, பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை என்றும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை என்றும் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் பேசி நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டனர்.
அவர்கள் 4 பேரையும் தீபக் மிஸ்ரா சமாதானம் செய்வார் அல்லது பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது அதிருப்தி நீதிபதிகளான குரியன் ஜோசப், ரஞ்சய் கோகாய், மதன் பி. லோகூர் ஆகிய மூவரும் தீபக் மிஸ்ராவை சந்தித்தனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நீதிபதி செல்லமேஸ்வர் சந்திக்கவில்லை. இவர்களது சந்திப்புக்கான காரணம் தெரியவில்லை. நீதிபதிகளை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கலாம் என தெரிகிறது.