கோரக்பூர் குழந்தைகள் இறப்பு விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
கோரக்பூரில் 63 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தானாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி : உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவத்ததோடு, இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஆலோசனை வழங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் 63 குழந்தைகள் அரசால் நடத்தப்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் உயிரிழந்தனர். குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் குழாய் சிகிச்சைக்கு இல்லாததே அடுத்தடுத்து 5 நாட்களில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே குழந்தைகள் இறப்புக்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறியுள்ளனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு மருத்துவமனையை விட்டு செல்லும் பெற்றோர் பார்க்கும் அனைவரும் களங்கிச் செல்கின்றனர்.
அலட்சியம் காரணமா?
ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனத்திற்கு பாக்கி வைத்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இது குறித்து இரண்டு முறை மருத்துவமனை ஊழியர்கள் நிர்வாகத்திற்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
விசாரணைக்கு உத்தரவு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் நேற்று மருத்துவமனையை பார்வையிட்ட பின்னர் உறுதியளித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்நிலையில் கோரக்பூர் சம்பவத்தை தாமான முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், சந்திராசத் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு மறுத்து விட்டது.
விசாரணைக்கு மறுப்பு
இது குறித்து சிறப்பு விசாணை ஆணையம் அமைக்கும் உத்தரவையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த விவகாரம் மாநில அரசு தொடர்புடையது என்பதால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய வாதத்தை முன்வைக்குமாறும் அவர்கள் கூறிவிட்டனர்.