29 பேர் பலியான மதுரா வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: மதுரா வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்றம் இது குறித்து உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரிடம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை, நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது கடந்த 2ம் தேதி வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மதுரா வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக தலைவருமான அஸ்வினி உபத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 7ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் பி.சி. கோஸ் மற்றும் அமிதாவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
மதுரா வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு நீங்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரா வன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி இம்தியாஷ் முர்தாஷா தலைமயில் ஒரு நபர் விசாரணைக்கமிஷனை உ.பி அரசு அமைத்துள்ளது.