மேக்சிஸ் வழக்கு: கோர்ட் சம்மனை ரத்து செய்யக் கோரிய தயாநிதி, கலாநிதி மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்ட்டது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலேயே இருவரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இவ்வழக்கில் தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தயாநிதி, கலாநிதி உட்பட 6 பேரும் வரும் மார்ச் 2-ந் தேதி ஆஜராகும்படி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த அக்டோபரில் சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில், "ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டுமே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடையதல்ல. எனவே, இந்த வழக்கில் தங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதால் சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுகிறது என்று முறையிட்டிருந்தனர்.
SC refuses liberty to Dayanidhi Maran to move Delhi HC against special court's order summoning him as accused in Aircel-Maxis case.
— Press Trust of India (@PTI_News) February 9, 2015
இம்மனுவை கடந்த 6-ந் தேதியன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.கோபாலகவுடா, ஆர்.பானுமதி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையும் திருப்திகரமாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. எந்த முகாந்திரத்தில் சம்மனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளீர்கள்? தற்போது சம்மனை எதிர்த்து ஏன் நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு வரவேண்டும்? வேண்டுமானால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுங்கள்.. இம்மனுவை விசாரிக்க முடியாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பின்னர் அந்த உத்தரவு வெளியான சில மணிநேரத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்கு எதையும் எந்த உயர்நீதிமன்றத்திலும் நடத்தக் கூடாது.. அனைத்து ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்குகளுமே உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதனை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவுடா மற்றும் பானுமதி பெஞ்ச், தயாநிதி, கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முடியாது என்ற தங்களது உத்தரவைத் திரும்பப் பெற்றனர்.
இம்மனு இன்று தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள என்ன தயக்கம்? நீங்கள் எதிர்ப்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலேயே தெரிவிக்கலாம். டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூட முறையிட முடியாது என்று கூறி தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் இருவரும் மார்ச் 2-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.