நீதிபதி ஏ.கே. கங்குலிக்கு ஆதரவான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
ஏ.கே கங்குலி தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக அவரிடம் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றிய சட்ட மாணவி ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு கங்குலி மீதான புகார்களுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து அவரை மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க குடியரசு தலைவர் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த மருத்துவர் பத்மா நாராயண் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், கங்குலி மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு அளித்த அறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது நீதிபதி கங்குலிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.