இஷ்ரத் ஜஹான் வழக்கு: போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரும் மனு டிஸ்மிஸ்
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தில் குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் வாக்குமூலம் அளித்தார்.
அவரது வாக்குமூலத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு குஜராத் போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் மாநில டிஐஜியாக இருந்த டி.ஜி.வன்சாரா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது, இஷ்ரத் ஜஹான் ஒரு தீவிரவாதிதான் என ஹெட்லி வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதால் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா வாதிட்டார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.