காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற குறைந்தது 10 சதவிகித இடங்களை ஒரு கட்சி வென்றிருக்க வேண்டும். அதாவது 55 இடங்களை பெற்றிருக்க வேண்டும் ஆனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து பெற உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வந்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாத்கி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜனுக்கு அனுப்பிய அறிக்கையில்: "காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்து கோர எந்த முகாந்தரமும் இல்லை. மக்களவை வரலாற்றில் இது போன்றதொரு நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்கவில்லை. அதனால், காங்கிரஸ் அப்படி ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி தங்களுக்கும் அதன் அடிப்படையில் எதிர்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரவும் வழிவகை இல்லை" என தெரிவித்திருந்தார்.