நீதிபதி கர்ணன் சிறைத் தண்டனையில் மாற்றம் இல்லை... விடாப்பிடி சுப்ரீம்கோர்ட்!
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் சிறைத்தண்டனை அளித்து நீதிபதி கர்ணனுக்கு அளித்த உத்தரவில் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய போது அப்போதைய தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்ணன் தடை உத்தரவு பிறப்பத்தார். இதைத் தொடர்ந்து, இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2015-ஆம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார் கர்ணன். இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காததோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு எதிரான உத்தரவுகளையும் பிறப்பித்தார். இந்நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்காததால் உச்சநீதிமன்றத்தை அவமதித்ததால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் சென்னை வந்த போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதுவரை நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய 4-வது முறையாக கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.