அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரண வழக்கு.. வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, 2014 டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, திடீரென மரணமடைந்தார். இவர், மரணத்திற்கு முன் விசாரித்துக் கொண்டிருந்தது குஜராத்தில் நடைபெற்ற சொரபுதீன் என்கவுன்டர் வழக்கு என்பதும், இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்ததும், லோயா மரணம் குறித்த சர்ச்சையை கிளப்பியது.
லோயா மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தஹ்ஸின் பூனாவாலா அணுகினார். மகாராஷ்ட்ராவை சேர்ந்த பத்திரிகையாளர் பந்தூ ராஜ் லோனே மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அவை இணைக்கப்பட்டு ஒரே மனுவாக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். லோயா சாவில் மர்மம் இல்லை என்பது மகாராஷ்டிரா அரசின் வாதம்.
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வாதிடுகையில், லோயா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கூடாது. லோயாவுக்கு உடல்நல பிரச்சினை ஏற்பட்டபோது 4 நீதிபதிகள் அதே நிகழ்ச்சியில் உடன் இருந்தனர். அவர்களையும் நாம் சந்தேகப்படுவதுபோல ஆகிவிடும் என்பதால் விசாரணை தேவையில்லை. ஒரு மனிதருக்காக இந்தியாவின் மொத்த சிஸ்டமும் செயல்படுகிறது என்ற யூகங்களுக்கு நாம் இடம் கொடுப்பதற்கு பதில், பேசாமல் நீதித்துறையை இழுத்து மூடிவிட்டு போய்விடலாமே என்றார்.
இந்த நிலையில், லோயா வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்க எழுந்துள்ளது.