"ஹெவி லோட்” வாகனங்களுக்கு டெல்லிக்குள் நுழைய தடை- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
டெல்லி: டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த கனரக வாகனங்கள் நுழைய உச்சநீதிமன்றம் தடை விதித்து அதிரடி தீர்ப்பினை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.
15 நாட்களுக்கு சோதனை:
சோதனை முயற்சியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த முதல் தேதி தொடங்கியது. வருகிற 15 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.
விஐபி வாகனங்களுக்கு விலக்கு:
இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பெண்களால் ஓட்டப்படும் கார்கள், பேட்டரியால் இயங்கும் கார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள், ஆட்டோ, ரிக்ஷா, பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வி.ஐ.பி. வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கும் தடை:
இதேபோல், கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 2,10.58 மற்றும் டெல்லி நெடுஞ்சாலை 57 ஆகியவற்றின் வழியாக டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
செஸ்வரியுடன் நுழையலாம்:
எனினும், டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மட்டும் காற்று மாசுபாட்டுக்கான அபராதவரி செலுத்தி டெல்லிக்குள் நுழையலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் வாகனங்களுக்கு கோரிக்கை:
2 ஆயிரம் சி.சி.க்கும் அதிகமான இழுவைத்திறன் கொண்ட டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாகன உற்பத்தியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.