ஜாமீனுக்கு ரூ.10,000 கோடி- செபிக்கு ரூ36,000 கோடி .. சஹாரா தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: முறைகேடாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க ரூ.5000 கோடி பிணைத் தொகையை ரொக்கமாகவும், ரூ.5000 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் சுப்ரதா ராய் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கடந்த ஒரு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார். அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க வேண்டுமானால் அவர் ரூ.5000 கோடி பிணைத் தொகையை ரொக்கமாகவும், ரூ.5000 கோடிக்கான வங்கி உத்ரவாதத்தையும் வழங்க வேண்டும்.
மேலும் செபி அமைப்புக்கு அவர் வழங்க வேண்டிய ரூ.36,000 கோடியையும் 18 தவணைகளில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் தவணைத் தொகையாக ரூ.3000 கோடி செலுத்த வேண்டும்.
இத்தவணையை செலுத்தத் தவறினால் சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் பாஸ்போர்ட்டை போலீஸில் ஒப்படைக்க வேண்டும். நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றாலும் அது குறித்து டெல்லி போலீஸுக்கு முழு விபரத்தை அளிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தனர்.
ஆனால், சுப்ரதா தரப்பில் இருந்து வங்கி உத்ரவாதமாக ரூ.5000 கோடி செலுத்த இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.