தப்பி ஓடிய விஜய் மல்லையாவை ஆஜர்படுத்தாது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கடும் கண்டனம்
விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: பொதுத்துறை வங்கிகளிடம் ரூ9,000 கோடி கடன் பெற்று அதை திருப்பி கட்டாமல் இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ9,000 கோடி கடன் பெற்றிருந்தார். ஆனால் அவற்றை திருப்பிச் செலுத்தாமல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போதே இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்துக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. அண்மையில் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டு சில மணிநேரத்திலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தெரசா மேவிடம் வலியுறுட்தல்
இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஜெர்மனியின் ஹாம்பார்க் நகரில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த பிரதமர் மோடி இக்கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இந்நிலையில் விஜய் மல்லையா மீதான வங்கி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
சொலிசிட்டர் ஜெனரலிடம் விளக்கம்
இதனால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொலிசிட்டர் ஜெனரலை அழைத்து விளக்கம் கேட்டனர். விஜய் மல்லையா மீதான வழக்கை மத்திய அரசு தவிர்க்கப் பார்க்கிறதா? ஏன் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தண்டனை விவரம்
அத்துடன் விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதற்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் வெள்ளிக்கிழமையன்று தண்டனை விவரம் பிறப்பிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.