பதவி உயர்வு: எஸ்.சி, எஸ்.டியினருக்கு "கோட்டா" தேவையில்லை.. ஆனால்.. செக் வைத்த சுப்ரீம் கோர்ட்!
Recommended Video
டெல்லி: அரசுப் பணிகளில், பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்ற முந்தைய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இட ஒதுக்கீடு அளிக்க விரும்பினால் அதை மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பாக 2006ம் ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பில் திருத்தம் தேவையில்லை என்றும், இதை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய பெஞ்ச்சின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு எதிராக நாகராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச், அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க தேவையில்லை. அதேசமயம், எஸ்சி, எஸ்டி பிரிவு ஊழியரின் பின்தங்கிய நிலை, அரசுப் பணி பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு போதிய வாய்ப்பு இல்லாமை, சம்பந்தப்பட்ட ஊழியரின் பணித் திறமையை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இட ஒதுக்கீட்டை அளிக்கலாம் என கூறியிருந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் மத்திய அரசின் சார்பிலும் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.
இன்று இதில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, நாகராஜு வழக்கின் தீர்ப்பில் எந்த மாற்றமும் தேவையில்லை. பணிக்கு எடுக்கும்போதே இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. எனவே பதவி உயர்வுக்கு தனியாக இட ஒதுக்கீடு தேவையில்லை. அதேசமயம், நாகராஜு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்த நிபந்தனைகள் தளர்த்தப்படுகின்றன. இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கும் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ இட ஒதுக்கீடு அளிக்க விரும்பினால் அதை மேற்கொள்ளத் தடை இல்லை. இருப்பினும் பதவி உயர்வுக்கு ஒட்டுமொத்த நாட்டின் எஸ்சி, எஸ்டி எண்ணிக்கையை கணக்கில் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.