கிறஸ்தவ மதப்படி ஆதார் அட்டை வாங்கக் கூடாது... விலக்கு கோரிய மனு தள்ளுபடி!
கிறிஸ்தவ முறைப்படி ஆதார் அட்டை வைத்திருப்பது பாவம் என்பதால் விலக்கு அளிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி : கிறிஸ்தவ மதப்படி ஆதார் அட்டை பெறுவது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐசக் ஜான் என்ற மாணவர் மேல்நிலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் அவருடைய ஆதார் எண்ணை கேட்டுள்ளது. மாணவனிடம் ஆதார் எண் இல்லாததால் மாணவனுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டுளளது.
இதனையடுத்து ஐசக் ஜானின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஒரு எண்ணை அடையாளமாகப் பெறுவது தாங்கள் பின்பற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானது என்பதால் ஆதார் அட்டை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சிக்ரி, கன்வில்கார், சந்திரசத், அசோக் பூஷன் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம் "இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமான விஷயம், ஆனால் ஆதார் விவகாரத்தில் மத ரீதியாக நீதிமன்றம் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை" என்று தெரிவித்துவிட்டனர்.