ராஜஸ்தான்: பாலியல் பலாத்கார கொலை குற்றவாளியின் மரண தண்டனை நிறுத்திவைப்பு
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரைச் சேர்ந்தவர் காலு கான் (48). கடந்த 2012 மே 3-ம் தேதி இவரும் இவரது 17 வயது மகனும் வீட்டில் இருந்தனர்.
அப்போது வீட்டின் அருகில் இருந்த 4 வயது சிறுமியை இருவரும் ஏமாற்றி அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறுமியின் நிலைமை மோசமானதால் அவரை கொலை செய்து வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டனர்.
பெற்றோர் திரும்பி வந்து தேடியபோது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதுதொடர்பாக காலு கான் மற்றும் அவரது மகன் மீது வழக்கு தொடரப்பட்டது. காலு கானுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காலு கான் மனு தாக்கல் செய்தார்.
‘இச்சம்பவத்தில் எனக்குத் தொடர்பில்லை. இது போலீஸாரின் கட்டுக்கதை. என் மகனும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபடுவது சாத்தியமற்றது' என்று அவர் வாதிட்டார்.
அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஷா ஜெயின் மதன் ஆஜராகி தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரினார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததுடன் இம்மனு குறித்து ராஜஸ்தான் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.