சன் டி.வி.க்கு நிம்மதி... ரூ742 கோடி சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: ரூ742 கோடி மதிப்பிலான சன் டி.வி. குழுமத்தின் சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்குவதற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு, சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு, பணப் பரிவர்த்தனை மோசடி என பல வழக்குகள் சன் டி.வி. நிறுவனத்தின் மீது நிலுவையில் உள்ளன. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சன் டிவியின் தலைமை அலுவலக இடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகள், கலாநிதி மற்றும் தயாநிதி மாறனின் டெபாசிட்டுகள் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்குவதாக அறிவித்தது. ஜூலை 10-ந் தேதியன்று சன் டி.வி. குழுமத்தின் இந்த சொத்துகள் கையகப்படுத்தப்படும் என்றும் அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆனால் அமலாக்கப் பிரிவின் இந்த சொத்து முடக்க நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் சன் டி.வி. வழக்கு தொடர்ந்தது.
சன் டி.வி.யின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சன் டிவி. குழுமம் மேல்முறையீடு செய்தது.
அதில், தங்களது இம்மனுவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரிக்கும் பெஞ்ச் மட்டுமே விசாரிக்காமல் இதர பெஞ்சுகளும் விசாரிக்கலாம் என்று வலியுறுத்தி இருந்தது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், சன் டி.வி. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலை விசாரிக்கும் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றியது; அத்துடன் சொத்துகளை ஜூலை 10-ந் தேதி அமலாக்கப் பிரிவு கையகப்படுத்தவும் இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்கும் ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பாக சன் டி.வி.யின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சன் டி.வி.யின் ரூ742 கோடி சொத்துகளை முடக்கும் அமலாக்கப் பிரிவின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சன் டி.வி. தற்போது இயங்கி வரும் இடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு தம் வசம் கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி அமலாக்கப் பிரிவு தம் வசம் இந்த சொத்துகளை கையகப்படுத்தினால் சன் டி.வி தற்போது இயங்கி வரும் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கும். அது சன் டிவி குழுமத்தின் ஒட்டுமொத்த சேனல்கள் ஒளிபரப்பையும் பாதித்திருக்கும்.