நித்யானந்தாவிடம் ஆண்மை சோதனை நடத்த இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம்தேதி, அதாவது நாளை, ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
பெங்களூரிலுள்ள விக்டோரியா, அரசு மருத்துவமனையில், இந்த பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியிருந்தது. இதனிடையே தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடை கோரி, நித்யானந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை சோதனை நடத்த இடைக்கால தடை விதித்தது. அடுத்த வாரம் மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடைபெறும். அப்போது பாதிக்கப்பட்டோர் தரப்பில் வாதத்தை முன்வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.