மன்மோகன்சிங் 'ரிலாக்ஸ்'. நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் அனுப்பிய சம்மனுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!!
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கடந்த 2005-ம் ஆண்டு நிலக்கரித் துறையின் பொறுப்பும் அவர் வசம் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஒடிஷாவில் உள்ள தலபிரா-2 சுரங்கத்தில் இருந்து ஹிண்டால்கோ என்னும் நிறுவனத்துக்கு நிலக்கரியை எடுக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி பாரத் பராசர் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை குற்றம் சாட்டப்பட்டவராகவும் ஏப்ரல் 8-ந் தேதியன்று நேரடியாக ஆஜராகுமாறும் கடந்த 11-ந் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
நிலக்கரித்துறையின் முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், ஹிண்டால்கோ நிறுவன தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ அதிகாரிகள் சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா, ஹிண்டால்கோ நிறுவனம் ஆகியோருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதனை எதிர்த்து மன்மோகன்சிங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் காலகட்டமான 2005-ம் ஆண்டில் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான கோட்பாடு எதுவும் வகுக்கப்படவில்லை.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்குவது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஏதேனும் பாரபட்சம் காட்டினார் என்று குற்றம் சாட்ட முடியாது. அவர் என்றும் கடமை உணர்வுடனும், உச்சபட்ச நேர்மையுடனும் செயல்பட்டுள்ளார். அவர் கடமை தவறியதாகவோ, நேர்மை தவறி செயல்பட்டதாகவோ எந்த வகையிலும் குற்றம் சுமத்த முடியாது.
ஒடிஷா மாநில அரசின் பரிந்துரையின் பேரில், ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும் முடிவை உரிய அதிகாரம் படைத்தவர் என்ற முறையில் மன்மோகன் சிங் எடுத்தார். முடிவு எடுத்ததில் தவறு நடந்திருக்கலாம். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதனால் நீதிமன்ற சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மன்மோகன்சிங் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்த சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் அடுத்த உத்தரவு வரும் வரை மன்மோகன்சிங் உள்ளிட்டோர் தொடர்பான விசாரணைக்கும் தடை விதித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.