ஓபிஎஸ் பதவி தப்பியது- 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்- சபாநாயகரே முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
Recommended Video
டெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக 2017-ல் பதவியேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அந்த ஆண்டு பிப்ரவரி 18-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இந்நிலையில் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் தனபாலிடம் திமுக மனு அளித்தது.
இதன் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால் சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என கூறி திமுகவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. இதனை கடந்த பிப்ரவரி 4-ல் விசாரித்த உச்சநீதிமன்றம், தி முக கொடுத்த மனு மீது சபாநாயகர் முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்? தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா? இந்த வழக்கில் 3 ஆண்டுகள் காலதாமதம் என்பது தேவையற்றது என பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தியது.
மேலும் இது தொடர்பாக சபாநாயகர் தனபால் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக சபாநாயகர் தனபால் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அத்துடன் இந்த வழக்கின் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது.