ராஜிவ் வழக்கு: 7 தமிழரை ஏன் விடுதலை செய்யக் கூடாது? மத்திய அரசின் வாதம் தெளிவில்லை - உச்சநீதிமன்றம்
டெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான வாதங்கள் மத்திய அரசிடம் தெளிவாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி வாதிட்டு வருகிறார். இன்று மத்திய அரசின் வாதம் நடைபெற்றது.
அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான வாதங்களை மத்திய அரசு தெளிவாக விளக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.