ஹாதியா திருமணம் செல்லும்- சுப்ரீம் கோர்ட் அதிரடி
ஹதியா திருமணம் செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Recommended Video
டெல்லி: ஹாதியா திருமணம் செல்லாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஹாதியா. சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஷாபின் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததால் அவர் அந்த கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார்.
என்ஐஏ
எனினும் கணவரை பார்க்க அனுமதி கிடையாது என்று கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வந்தது.
திருமணம் ரத்து
இந்நிலையில் மகளின் திருமணத்தை ஏற்க மறுத்த ஹாதியாவின் தந்தை கேரள ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்தது.
இன்று விசாரணை
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அதிகாரம் இல்லை
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், மேஜரான இருவர் விருப்பப்பட்டு செய்து கொண்ட திருமணத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஹதியா திருமணம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை.
என்ஐஏவுக்கு உத்தரவு
மேலும் கலப்பு திருமணம் செய்து கொண்ட வழக்கு விசாரணையின் போது அவருடைய திருமணம் குறித்து என்ஐஏ எந்த வித கேள்விகளையும் எழுப்பக் கூடாது என்றும் கலப்பு திருமண விவகாரத்தில் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஹாதியாவின் திருமணம் செல்லாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இந்த நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே ஹாதியா மற்றம் ஜஹானின் திருமணம் செல்லும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மகளிர் தினத்தன்று ஹாதியாவுக்கு கிடைக்கப்பட்ட பரிசாகவே கருதப்படுகிறது.