குணமடைந்த மன நோயாளிகளை வீட்டில் சேர்க்க மறுக்கும் பெற்றோர்கள்: சுப்ரீம் கோர்ட்டு வேதனை
மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வுக்கு வழிமுறைகள் வகுத்து தருமாறு மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி: மன நல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான வழிகாட்டுதல் முறைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஜி.கே. பன்சால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, முழுமையாக குணப்படுத்தப்பட்ட நிலையில் 300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். அவர்கள் பூரண குணம் அடைந்த போதிலும் தொடர்ந்து அடைப்பட்டு அவதியுறுகின்றனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு அவர்களை மீட்டு உரிய மறுவாழ்வு அளித்திட வழி வகை செய்ய வேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி இருந்தார்.
அப்போது அவர் கூறுகையில், பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு தயாராக இருந்த போதிலும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவர்களை மீட்டு வீட்டிற்கு அழைத்து செல்ல விருப்பம் இல்லாமல் உள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அதற்கு காலஅவகாசம் தேவை என்றார்.
அவரிடம் நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரம், மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு விவகாரம். ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்த பின்னரும், அவரை மீண்டும் வீட்டில் சேர்த்துக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை.
ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சையினால் குணம் அடைந்த பின்னர், அவரை மனநல புகலிடத்திலோ, மருத்துவமனையிலோ அரசு தொடர்ந்து வைத்திருக்க முடியாது. குணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமூகத்தில் அவர்கள் வாழ வழிவகை செய்வதை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு கூறினர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 8 வார காலம் அவகாசம் வழங்கியது.