முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு எதிராக தமிழகம் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 3–ல் விசாரணை!
டெல்லி: முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது ஜூலை 3-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.
முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டுவதில் கேரளா மும்முரமாக இருக்கிறது. தற்போதைய அணைக்கு 500 அடிக்கு கீழ் உள்ள வல்லக்கடவிற்கு செல்லும் பாதையில் 15 இடங்களில் இதற்காக ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.
மத்திய வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் இந்த பணிகள் நடைபெற உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மே மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதாக கூறப்படும் பகுதியில் ஆழ்துளை எந்திரங்களை கொண்டு பணிகளை தொடங்கி இருப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயல். இதனால் தேசிய வனவிலங்கு வாரியம் 31.12.2014 அன்று வழங்கிய அனுமதியின் அடிப்படையில் கேரள அரசு முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணையை கட்டத் தொடங்குவதற்கான ஆய்வு பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கடந்த மாதம் 12-ந் தேதி மறுத்த தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், இம் மனுவை உடனடியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை முடிந்ததும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
தற்போது இந்த மனு ஜூலை 3-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.