பிரணாப் விமானம் தரையிறங்கிய ஓடுபாதையில் புகுந்த பன்றிக் கூட்டம்... விமான போக்குவரத்து துறை விசாரணை
டெல்லி : குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பயணித்த போயிங் 737 ரக விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியபோது பன்றி கூட்டம் ஒன்று புகுந்து இடையூறு ஏற்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்கள் பிரணாப் முகர்ஜி நாக்பூரில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது பிரணாப் முகர்ஜி விமானம் தரையிறங்கிய பின்பு இறுதியாக நிற்பதற்கு செல்லும் வழியில் ஓடுபாதையில் 8 பன்றிகள் கொண்ட கூட்டம் புகுந்து ஓடியது.
இந்த பாதுகாப்பை மீறிய சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தீவிரமாக விசாரணையை தொடங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பேசிய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ, மழை காரணமாக பன்றிகள் கூட்டம் ஓடுபாதையில் புகுந்துவிட்டதாக தெரிவித்தார்.
எனினும், இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு அம்சத்தில் கவனக்குறைவு இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.