'ஸ்கீம்' என்றால் காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே கிடையாது.. உச்சநீதிமன்றம் விளக்கம்
Recommended Video
சென்னை: காவிரி வழக்கில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு, 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ஒரு ஸ்கீமை (திட்டத்தை) மத்திய அரசு உருவாக்க வேண்டும். 6 வாரங்களுக்குள், காவிரி தீர்ப்பை அமல்படுத்த ஸ்கீம் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.
இருவேறு கருத்துக்கள்
ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்று தமிழக அரசு இதுவரை கூறி வந்தது. ஆனால், கர்நாடக அரசோ, ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என கூறி வந்தது. இந்த நிலையில், தமிழகம் சார்பில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில், தொடரப்பட்டது.
பரிசீலனை
இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில், வழக்கு பரிசீலனைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, ஸ்கீம் என்றால் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதை தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு வந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் இல்லை
அதே கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா, ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என்று மட்டுமே அர்த்தம் கிடையாது. தீர்ப்பை செயல்படுத்தும் அனைத்து வகையான அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் ஸ்கீம் என்றே நீதிமன்றம் கூறியிருந்தது என்று விளக்கம் அளித்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வகை செய்வோம். தமிழக விவசாயிகளின் கவலை எங்களுக்கும் தெரியும். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை நீதிமன்றம் பெற்று தந்தே தீரும் என்று தெரிவித்தார்.
வாதத்தில் கோட்டைவிட்டதா தமிழக அரசு?
ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமேதான் என தமிழக அரசு தவறாக மக்களை வழி நடத்தி வந்துள்ளது. இப்போது உச்சநீதிமன்றமே அவ்வாறான அர்த்தத்தில் மட்டும் கூறவில்லை என தெரிவித்துவிட்டது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது. தமிழக அரசு தனது வாதத்தின்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போதிய அளவுக்கு வலியுறுத்தவில்லை என்பதே இதன் பொருளாகும்.